Dienstag, 6. Januar 2015

மந்திரம்

சாமி! குழந்தைக்கு உடம்பு சரியில்லே. வைத்தியரிடம் காட்டி, எவ்வவளவோ மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து பாத்துட்டேன். இன்னும் சரிவரலே. நீங்கதான் ஏதாச்சும் மந்திரம் சொல்லி குழந்தையைக் காப்பாத்தணும், என்றாள் குழந்தையைக் கொண்டு வந்த ஒரு தாய். அது ஒரு ஆஸ்ரமம். தீராத வியாதியுள்ள குழந்தைகளை இங்குள்ள சாமியாரிடம் காட்டி மந்திரம் சொல்லி நோய் போக்க வேண்டுவர் அப்பகுதி மக்கள். சாமியாரும் மனதுக்குள் ஏதோ மந்திரம் சொல்லி, தீர்த்தம் கொடுப்பார். குழந்தைகளுக்கு நோய் போகும். இந்தப் பெண் வந்த சமயத்தில் தலைமை குரு இல்லை. சில சிஷ்யர்கள் தான் இருந்தனர். அதில் ஒரு சீடர், தாயே! வீட்டுக்குப் போய், ஒரு குவளை தண்ணீர் எடுத்து, அதில் கையை வச்சு ராமநாமத்தை மூன்று முறை சொல்லி, தீர்த்தத்தை குழந்தைக்கு கொடு, சரியாயிடும், என்றார். அப்பெண்ணும் அவ்வாறே செய்ய குழந்தை கண்விழித்தது. அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தை வழக்கம்போல் துருதுருவென விளையாடி மகிழ்ந்தது. மறுநாள் அந்த தாய் சாமியாருக்கு நன்றி சொல்ல வந்தாள்.  சுவாமி, தங்கள் சீடர் சொன்னபடியே ராமநாமத்தை மூன்று தடவை சொல்லி தீர்த்தம் கொடுத்தேன்.  ராமநாமத்தின் மகிமையால் குழந்தை பிழைத்தது. நான் தங்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன்  என்றாள். சாமியார் அவளை அனுப்பி விட்டார். அவருக்கு கடும் கோபம். சீடனை அழைத்தார். முட்டாளே! நானில்லாத நேரத்தில் ராமநாமத்தின் மகிமையை குறைத்திருக்கிறாய். இந்தா பிடி! இந்தக் கல்லை எடுத்துக் கொண்டு போய், இதன் விலை என்ன என்று கேட்டு வா, எனச்சொல்லி அனுப்பி விட்டார். அவர் அந்தக்கல்லுடன், ஒரு மளிகைக்கடைக்கு போனார். கடைக்காரர் அதைப் பார்த்து விட்டு, என்னிடம் இருந்த எடைக்கல் தொலைந்து விட்டது. அதற்கு பதில் இதைப் பயன்படுத்திக் கொள்வேன். வேண்டுமானால் ஒரு ரூபாய் தருகிறேன், என்றார். சீடர் ஒரு நகைக்கடைக்குச் சென்றான்.


அவர்கள் அதை பரிசோதித்து விட்டு, ஆ...இது விலை உயர்ந்த கல். இதைப் போன்ற அபூர்வக்கல் கிடைப்பது எளிது. தருகிறீரா..ஒரு லட்சத்துக்கு, என்றனர். பின்னர் அவர் அரண்மனைக்கு போய், ராஜாவிடம் காட்டினார். ராஜா தன் ஆஸ்தான சிற்பிகளை வரவழைத்துக் காட்ட, இது ஒரு கோடி பெறுமே. இது போன்ற கல் கிடைப்பது அதிசயம், என்றனர். ராஜா அதை விலைக்கு கேட்டார். குருநாதரிடம் கேட்டு வருவதாகச் சொல்லி விட்டு திரும்பிய சீடர், நடந்ததை குருவிடம் சொன்னார். சீடனே! இக்கல் நீ கேட்ட இடத்தில் எல்லாம் ஏதோ ஒரு மதிப்பை உன்னிடம் கூறினர். ஆனால், அவர்கள் சொன்னதை விட இது விலை உயர்ந்தது. இதோ பார், என்றவர், சில இரும்புத்துண்டுகளை எடுத்து அதன் மீது கல்லை வைத்தார். இரும்பு தங்கமாக மாறிவிட்டது. பார்த்தாயா! இது ஸ்வர்ணமணி என்னும் அபூர்வக்கல். இரும்பை தங்கமாக்கும் சக்தி கொண்டது. ஆனால், நீ சொன்னாயே, ராமநாமம். அது இவை எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. அதை ஒருமுறை சொன்னாலே போதும். நீ மூன்று முறை சொல்லச் சொன்னது தவறல்ல என்றாலும், ஒருமுறை சொன்னாலே நோய்கள் தீரும் என்பதை ஆணித்தரமாகச் சொன்னால் தான் ராமநாமத்திற்கு மகிமை மேலும் அதிகரிக்கும். புரிந்ததா? என்றார். குருவின் புத்திக்கூர்மை, ராமநாமத்தின் மகிமை ஆகியவற்றை நினைத்து சீடன் பேரானந்தம் கொண்டு விக்கித்து நின்றான்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen